டெல்லி: கடந்த ஆண்டு தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாக தீவிர ஆலோசனை நடைபெற்ற நிலையில், இது நடக்காமல் போக என்ன காரணம் என்பது குறித்து பிரியங்கா காந்தி முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் பிப். 10இல் தொடங்கி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் அவர் என்டிடிவி செய்தி நிறுவனத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதில் பிரசாந்த் கிஷோர் உட்பட பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த 2014 மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆலோசகராக பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர். இருப்பினும், அதன் பின்னர் கடந்த 2016க்கு பின்னர் அவர் பாஜக உடன் இணைந்து பணியாற்றவில்லை. இந்தச் சூழலில் அவர் காங்கிரசில் இணைவதாகக் கடந்த ஆண்டு வெளியான தகவல் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
இருப்பினும், பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அது நடக்காமலேயே போனது. இது தொடர்பாக நெறியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரியங்கா காந்தி, "கடந்த ஆண்டு ஒரு கட்டத்தில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாகத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது உண்மை தான். ஆனால் அது நடக்காமல் போக பல்வேறு காரணங்கள் உள்ளன. இது நடக்காமல் போக அவர் தரப்பில் சில தவறுகள் உள்ளது. அதேபோல எங்கள் தரப்பில் சில தவறுகள் உள்ளன.
என்ன தவறுகள் என்று நான் விளக்க விரும்பவில்லை. இருப்பினும் சில குறிப்பிட்ட முக்கிய விஷயங்களில் எங்கள் இரு தரப்பினருக்கு இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இது பேச்சுவார்த்தையை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துவதில் தடையாக இருந்தது. வெளியாள் ஒருவரைக் காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வருவதில் நாங்கள் தயங்கவில்லை. அதற்கு இதில் எவ்வித சம்பந்தமும் இல்லை. அப்படி நாங்கள் தயங்கி இருந்தால் பலகட்ட பேச்சுவார்த்தை கூட நடந்திருக்காது" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்,
