டெல்லி : உக்ரைன் நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களை மீட்கும் பணியான ஆபரேஷன் கங்காவின் வெற்றிக்கு உலக அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு தான் காரணம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ், மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
தலைநகரான கீழ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரின் பக்கம் ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கப்பட்டது. அணு உலைகள், விமான நிலையங்கள் மீது தீவிர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
துறைமுகங்கள் , மக்கள் வசிக்கும் கட்டடங்கள், ராணுவ மையங்கள், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடையாகவும் வாகனங்கள் உதவியோடும் தொடர்ந்து வெளியேறி வரும் காட்சிகள் உலக அளவில் பேசு பொருளாக உள்ளது.
உக்ரைனின் பல பகுதிகளில் இன்னும் பல மாணவர்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், அவர்களை மீட்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. மேலும் 10 ஆயிரம் மாணவர்கள் அங்கு தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. எல்லைகளில் தஞ்சம் புகுந்துள்ள மாணவர்களை அண்டை நாடுகளுக்கு வரவழைத்து விமானம் மூலம் இந்தியா அழைத்து வர நடவடிக்கைகளை இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளது. இதுவரை பல கட்டங்களாக மாணவர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமையன்று, இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்திய அரசாங்கத்தின் ஆபரேஷன் கங்கா மூலம் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவித்த 13,700 குடிமக்களை பத்திரமாக நாடு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களை மீட்கும் பணியான ஆபரேஷன் கங்காவின் வெற்றிக்கு உலக அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு தான் காரணம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புனேவில் உள்ள சிம்பயோசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர் இதனைத் தெரிவித்தார். ஆபரேஷன் கங்கா மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்களை போர் மண்டலத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றி வருகிறோம் என்று பிரதமர் மோடி கூறியதாக கூறப்படுகிறது. "இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கின் காரணமாக, உக்ரைனின் போர் மண்டலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களை அவர்களின் தாய்நாட்டிற்கு திரும்பக் கொண்டு வந்துள்ளது" என்று அவர் கூறினார். பல பெரிய நாடுகள் தங்கள் குடிமக்களை வெளியேற்றுவதில் கடினமான கப்பல்களை எதிர்கொள்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.