டெல்லி: உபி, உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
உபி, உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது பற்றி ஆலோசிப்பதற்காக டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்
கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்கிறார் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதே சமயம் கட்சியில் சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் ஐந்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. முக்கியமாக பஞ்சாப்பில் ஆட்சியை பறிகொடுத்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. பஞ்சாப்பில் காங்கிரஸ் மிக மோசமாக செயல்பட்டது. அங்கு காங்கிரஸ் வெறும் 18 இடங்கள் மட்டுமே வென்றது.
முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங்குடன் மோதியது இவர்தான். இதன் காரணமாகவே அங்கு உட்கட்சி குழப்பம் வந்தது., இதனால் அம்ரீந்தர் பதவி விலக நேரிட்டது. அதன் பின்பே சரஞ்சித் சிங் சன்னி முதல்வராக அறிவிக்கப்பட்டு, பின்னர் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டு 111 நாட்கள் ஆட்சி புரிந்தார். ஆனால் சித்துவின் மோசமான திட்டமிடல் காரணமாக அங்கு காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
இந்த நிலையில்தான் தற்போது சிந்துவை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். அதோடு உபி, உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். உடனே இவர்கள் பதவி விலக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, கோவா காங்கிரஸ் தலைவர் கிரீஷ் ராயா, உத்தரகண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியால், மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் லோக்கேன் சிங் ஆகியோரை ராஜினாமா செய்ய சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். கட்சியில் சீரமைப்பு பணிகளை செய்வதற்காக இந்த நடவடிக்கையை தலைமை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
