கீவ்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 26வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் :உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது.இந்நிலையில் உக்ரைன் அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா தற்போது செய்து வருவது யுத்தம் அல்ல பயங்கரவாதம் என்று கூறியுள்ளார். மேலும், ரஷ்யா அதிபர் புடினை நேருக்கு நேர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தகவல்
உக்ரைனில் ரஷ்யா தாக்குதலில் மார்ச் 19 வரை பொதுமக்கள் 902 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1459 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் பலி
ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக 115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் மட்டும் 60 லட்சம் பேர்
உக்ரைனில் போர் துவங்கிய நாள் முதல் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளதாக ஐ.நா., வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டில் மட்டும் 60 லட்சம் பேர் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைனில் மரியூபோல் நகரத்தில் மக்கள் தங்க வைக்கப்பட் பள்ளி மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 400 பேர் காயமுற்றனர்.
உக்ரைன் மைகோலைவ் நகரில் உள்ள ராணுவ முகாம் மீது ரஷ்ய படை அதிரடி தாக்குதல் நடத்தியது. ராணுவ வீரர்கள் பலர் இரவு நேரம் என்பதால் உறங்கி கொண்டிருந்ததாக தெரிகிறது. மேலும் பலர் காயமுற்றனர். சேதம் குறித்த தகவல் ஏதும் அதிகாரப்பூர்வமாக இல்லை.