புதுடில்லி:'நேஷனல் ஹெரால்டு' நாளிதழ் விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. காங்., தலைவர் சோனியா அவரது மகனும் காங்., - எம்.பி.,யுமான ராகுல் ஆகியோரை அமலாக்கத் துறை விசாரித்துள்ளது. இதை எதிர்த்து நாடு முழுதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.
'இந்த விஷயம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது, கட்சியின் பொருளாளர் மறைந்த மோதிலால் வோராவிற்கு தான் தெரியும்' என அம்மாவும், மகனும் விசாரணையில் சொன்னதாக டில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.இதை கடுமையாக எதிர்க்கிறார் வோராவின் மகனும், சத்தீஸ்கரின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான அருண் வோரா. காங்., கட்சியின் பண விவகாரங்களைக் கவனித்துக் கொண்டவர்கள் இரண்டு பேர். ஒருவர் பொருளாளர் மோதிலால் வோரா. கட்சிக்கு எங்கிருந்து பணம் வருகிறது; யார் தருகின்றனர்; பணம் எங்கே உள்ளது என அனைத்து விஷயங்களும் அவருக்கு தான் தெரியும்.
ஆனால் அவர் இப்போது உயிரோடு இல்லை.இன்னொருவர் அகமது படேல். இவர் சோனியாவிற்கு வலது கரமாக இருந்தவர். வோராவிற்கு அடுத்த படியாக இவருக்கும் காங்கிரசின் பண விவகாரங்கள் அனைத்தும் தெரியும்; இவரும் இறந்து விட்டார். இதனால் கட்சியின் மொத்த பணமும் எங்கே இருக்கிறது என்பது மற்ற தலைவர்களுக்கு தெரியாது என்கின்றனர், காங்., தலைவர்கள்.'மறைந்த இந்த இரு காங்., தலைவர்களை தவிர வேறொருவருக்கும் கட்சியின் பணம் எங்கே இருக்கிறது என்பது தெரியும்; அவர் பிரதமர் மோடி' என்கின்றனர் காங்கிரசார்.
