இதற்கிடையில் புதன்கிழமை வர்த்தகத்தில் ஏர்டெல் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) 2 சதவீதம் உயர்ந்து ரூ.719 ஆக வர்த்தகமாகின.
நாடு முழுக்க 5ஜி சேவையை தொடங்க பிரபல தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் முனைப்பு காட்டிவருகிறது. இதனை ஏர்டெல் நெட்வொர்க்கின் நிர்வாக அலுவலரும், தலைமை செயல் அலுவலருமான கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “5ஜியை உடனடியாகத் தொடங்கி, மிக விரைவில் இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்ய உத்தேசித்துள்ளோம். மார்ச் 2024க்குள், 5,000 நகரங்கள் மற்றும் முக்கிய கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் 5G மூலம் இணைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். உண்மையில், 5,000 நகரங்களுக்கான விரிவான விரிவாக்கத் திட்டங்கள் முழுமையாக நடைமுறையில் உள்ளன. இது நமது வரலாற்றில் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும்” என்றார்.
எனினும் 5ஜி சேவை நெட்வொர்க்கின் விலை பட்டியல் குறித்து அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆகவே இந்த விலைப் பட்டியலும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இன்று புதன்கிழமை வர்த்தகத்தில் ஏர்டெல் பங்குகள் லாபத்தில் வர்த்தகத்தை தொடங்கின. அந்த வகையில் மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) 2 சதவீதம் உயர்ந்து ரூ.719 ஆக வர்த்தகமாகின.
ஏர்டெல் நாட்டிலுள்ள ஒவ்வொரு வட்டத்திலும் 100 மெகா ஹெர்ட்ஸ் 3.5 ஜிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையைப் பெற்றுள்ளது. 3.5 ஜிகாஹெர்ட்ஸ் அதன் வாடிக்கையாளர்களுக்கு உண்மையான 5ஜி அனுபவத்தைக் கொண்டு வரக்கூடியது. ஏர்டெல் நாட்டின் ஒவ்வொரு வட்டத்திலும் 800 மெகா ஹெர்ட்ஸ் 26 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் உரிமையை வாங்கியது. இதன் மொத்த மதிப்பு ரூ.43,040 கோடி.