சென்னை-ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தால், உலக பொருளாதாரம் பாதிக்கும் எனக்கருதி, முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்தது
.உலக நிலவரங்களால், சில தினங்களாக உள்நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 4,610 ரூபாய்க்கும்; சவரன் 36 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனையாகின. கிராம் வெள்ளி 66.60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று ஒரே நாளில், தங்கம் கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து, 4,715 ரூபாய்க்கும்; சவரனுக்கு அதிரடியாக 840 ரூபாய் உயர்ந்து, 37 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்கப்பட்டன.
வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து, 67.40 ரூபாயாக இருந்தது. திருமண சீசன் துவங்கியுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து வருவது, திருமணம் நடத்த உள்ளவர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் நிலவுகிறது. போர் மூண்டால் உலக பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். பொருளாதார துறைகள் சார்ந்த பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை நோக்கிச் செல்லும்.இதனால், தற்போதே முதலீட்டாளர்கள் திட்டமிட்டு, தங்கத்தில் முதலீடு செய்து வருவதால், அதன் விலை உயர்ந்து வருகிறது. உள்நாட்டிலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதுதவிர, வைரத்தின் விலையும் 35 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
